முக்கிய செய்திகள்....

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை அனுப்பி வைத்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பொருட்களை வன்னிக்கு எடுத்துச் செல்ல விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகியவற்றில் முகவர்களை புலிகள் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது


கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளபோது,ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதானது அங்குள்ள வர்த்தகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமெனக் கூறப்படுகிறது.அதிகளவிலான உல்லாசப் பயணிகளின் வருகையையடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு வடக்கிலுள்ள புராதன நகரங்கள் மற்றும் உல்லாசப் பயணிகளை கவரக்கூடிய இடங்களை அழகுபடுத்துமாறும் திருத்தியமைக்குமாறும் உல்லாசத்துறை அமைச்சு அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவ் வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் நாட்டில் எந்தவிதமான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் இலங்கையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை அண்மையில் லண்டனில் நடத்திய மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது என குறிப்பிடப்படுகிறது.


பொருளாதாரத்தில் தன்னிறைவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்திலான பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு நிலையை எட்டுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம மட்டத்திலான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக தமது அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேசத்தினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் சரியான முறையில் வாக்களிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஜே.வி.பியை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா நேரடியான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜே.என்.பி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
1988 – 1989ம் ஆண்டு கிளர்ச்சிகளின் போது ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக பொன்சேகா கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை இராணுவ முகாமில் வைத்து ஜே.வி.பி உறுப்பினர்ளை சரத் பொன்சேகா சித்திரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜே.வி.பி கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சில முக்கிய ஜே.வி.பி தலைவர்கள் கந்தளாய் இராணுவ முகாமில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றுக்கள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு வழங்கப்படும் வசதிகளை விடவும், கூடுதலான சலுகைகளை அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வடமேற்குக் கடற்பகுதியில் சிக்கியிருந்த ஐந்து தமிழ் அகதிகள்; ஞாயிறன்று கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
24 க்கும் 40 வயதுக்குமிடைப்பட்ட இந்த அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வர முற்பட்டபோது மன்னார் கரையோரத்தினை அண்டிய மணற்திட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களாக மணற்திட்டிலேயே இருந்திருக்கிறார்கள்.
மணற்திட்டில் நிர்க்கதியாக விடப்பட்ட இந்த அகதிகளைக் கடற்படையினர் கரைசேர்த்ததோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கியிருக்கிறார்கள்.
உணவு மற்றும் மருத்துவ உதவிகளும் இந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பகட்ட விசாரணைகள் முடிந்தபின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள்.
இலங்கையில் போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் தங்களது தாயகம் திரும்பி வருகிறார்கள்.
இதேபோன்று கடந்த மாதம் கடற்படையினரின் உதவியுடன், ஏழு இலங்கை அகதிகள் மன்னார் கரையோரத்திற்கு வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


தெல்லிப்பளையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தை நேற்றுத் திறந்து வைத்துப் பேசுகையில், இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகள் சிலவும் பயிர்ச்செய்கை நிலங்களும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.



இந்தியச் செய்திகள்

மகளிர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் 2வது முறையாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியதும் மக்களவையில் கேள்வி நேரத்திற்கு இடையூராக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட்டதை எதிர்த்தும் சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவை 12 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் அவை 12 மணிக்கு கூடியதும் மீண்டும் சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவையை பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைத்தார் அவைத் தலைவர் மீரா குமார்.


இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று சிவ்சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த சிவ்சேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால் தாக்ரே, இந்தியாவின் மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழிதான் என்றும், அதனை மற்ற மொழி பேசும் மக்களின் மீது திணிக்கக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
அது தேசிய மொழி அல்ல. இந்த நாட்டின் மற்ற மொழிகளைப் போல அதுவும் ஒன்று” என்று பால் தாக்ரே கூறியுள்ளார்.
சிவ்சேனா கட்சி மீது மராட்டிய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், அவர்களுக்காக சிவ்சேனா நடத்தும் போராட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் ஊடகங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்ட வரைவு ஆதரிப்பதாகக் கூறிய தாக்ரே, அதனை லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பதை கண்டித்தார்.
முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்திய லாலு பிரசாத், பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என்று தாக்ரே பேசியுள்ளார்.


மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் கடிதத்தை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இன்று ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கையளிக்கின்றார்.
நானும், முலாயம் சிங்கும் பிரதமரை சந்தித்த போது, தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம் என்றும் எங்களுடைய வேண்டுகோளையும் மீறி மசோதாவை மாநிலங்களவையில் அரசு நிறைவேற்றி இருக்கிறது என்றும் கூறினார்.
எனவே குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று சந்தித்து, மத்திய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுக்க இருக்கிறேன் என்று லாலு பிரசாத் கூறினார்.


புதுச்சேரியில் 2010-2011 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.
முதல் நாளில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படுகிறது என்றும் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் வைத்திலிங்கம் தாக்கல் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்


பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது.
வேட்புமனு தாக்கல் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 14 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று 5 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர். சில வேட்பாளர்களின் பெயர்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களையும் சேர்த்து மொத்தம் 34 மனுக்கள் தாக்கலாகியுள்ளன.
மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இன்று பிற்பகல் 3 மணி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 13ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.



 உலகச்செய்திகள்

இந்தோனேஷியா, ஜகத்திராவில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இதனை இந்தோனேஷிய ஜனாதிபதி சுசிலோ பம்பங் யுதோயோனோ உறுதிப்படுத்தியுள்ளார்.
பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று கொல்லப்பட்டிருப்பதாக இந்தோனேஷிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.;


ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க இராணுவ வீரர்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், வன்முறைச் சம்பவங்களுக்கு இடையே ஈராக்கில் தேர்தல் நடந்தது ஒரு மைல் கல் ஆகும். தற்போது தேர்தல் நடந்து உள்ளதால், ஈராக் மக்களின் தேவைகள் முழுவதும் நிறைவேறி விடும் என்று நான் கருதுகிறேன்.
எனவே அங்கு யுத்த களத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க இராணுவ வீரர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அமெரிக்க வீரர்கள் அடுத்த ஆண்டில் முற்றிலும் திரும்பப் பெறப்படுவார்கள். எனினும் ஈராக்கில் அமைதி முழுமையாக திரும்பும் வரை அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று ஒபாமா கூறினார்.
இது குறித்து ஈராக்குக்கான அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ராய் ஒடியர்னோ டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் மட்டும் அடுத்த ஆண்டுவரை ஈராக்கில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.